கூடுதல் நிலப்பரப்புடன் சிறிலங்காவின் புதிய வரைபடம்
சிறிலங்காவின் புவியியல் வரைபடத்தை மீள வரையும் பணிகள் 60 வீதம் நிறைவடைந்துள்ளதாக, நிலஅளவைத் திணைக்களத்தின் அளவையாளர் நாயகம், உதயகாந்த தெரிவித்துள்ளார்.
1: 50,000 (1 செ.மீ = 0.5 கி.மீ) அளவுடைய, சிறிலங்காவின் புவியியல் வரைபடத்தில், மொத்தமுள்ள 92 பகுதிகளில், 65 பகுதிகளை மீள வரையும் பணிகள் முடிவடைந்துள்ளன. எஞ்சியுள்ள பகுதிகள் இந்த ஆண்டுக்குள் வரைந்து முடிக்கப்படும்.
கடைசியாக 2000ஆம் ஆண்டு சிறிலங்காவின் புவியியல் வரைபடம் வரையப்பட்டது. அதற்குப் பின்னர் நாட்டின் புவியியல் அமைப்பில் பல்வேறு மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.
கடந்த 18 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பாரிய உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களால் நிலப்பரப்பு விரிவடைந்துள்ளது.
கடலில் உருவாக்கப்படும் கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தினால், புதிதாக 2.6 சதுர கி.மீ நிலப்பரப்பு சிறிலங்காவுடன் இணைந்துள்ளது.
மொறகஹகந்த முன்னர் வனப்பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டிருந்தது. இப்போது அது பலநோக்கு நீர்ப்பாசனத் திட்டமாக மாறியுள்ளது.
நாட்டின் வரைபடத்தை தயாரிக்கும் பணிக்கு செய்மதி தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. பின்னர், திணைக்கள அதிகாரிகள் கள ஆய்வை மேற்கொண்டு, தரவுகளை உறுதிப்படுத்துகின்றனர்.
இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய வரைபடத் தயாரிக்கப்பட்டு விடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.