மேலும்

பாடசாலை பெண் அதிபரை மண்டியிட வைக்கவில்லை – ஊவா முதலமைச்சர் மறுப்பு

Chamara Sampath Dassanayakeபதுளையில் உள்ள தமிழ் பெண்கள் பாடசாலை அதிபரை முழந்தாளிட வைத்து மன்னிப்புக் கேட்க வைத்ததாக, தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை, ஊவா மாகாண முதலமைச்சர் சாமர தசநாயக்க நிராகரித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

“இந்து மதத்தைச் சேர்ந்த குறித்த பாடசாலை அதிபர் ஏனைய மதங்களைச் சேர்ந்த மாணவர்களைப் பாகுபாடாக நடத்துவதாக முறைப்பாடுகள் வந்தன.

எனவே அவரை எனது அதிகாரபூர்வ வதிவிடத்துக்கு அழைத்து, மாகாண கல்வி அமைச்சின் செயலர், கல்விப் பணிப்பாளர், மற்றும் முறைப்பாடு செய்த பெற்றோர் முன்னிலையில் விசாரித்தேன்.

சமூக நல்லிணக்கத்தைக் குழப்பக் கூடும் என்பதால், அதிபர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மாத்திரம் கேட்டுக் கொண்டேன். நட்புரீதியான கலந்துரையாடலுக்குப் பின்னர், பிரச்சினையை சுமுகமாக தீர்த்துக் கொண்டோம்.

எனினும், ஜேவிபி மாகாணசபை உறுப்பினர் சமந்த வைத்தியரத்ன, எனது பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் , அரசியல் உள்நோக்கத்துடன் பொய்யான பரப்புரைகளை மேற்கொண்டு வருகிறார். அவருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பேன்.” என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளை, சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபரான ஆர்.பவானியும், ஊவா முதலமைச்சர் மீதான குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார்.

இரண்டு பெற்றோர்கள் செய்த முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைக்காக, தாம் முதலமைச்சரரை அவரது அதிகாரபூர்வ வதிவிடத்தில் சந்தித்தாகவும், நட்பு ரீதியாக அந்தப் பிரச்சினை தீர்க்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பொய்யான பரப்புரைகள் மூலம் அரசியல்வாதிகள் மலிவான அரசியல் இலாபம் தேட முனைவதாகவும் பாடசலை அதிபர் பவானி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *