புலிகளின் பாடல்களுடன் யாழ்ப்பாணத்தில் பரப்புரை செய்யும் சுதந்திரக் கட்சி
யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் பரப்புரைக்கு விடுதலைப் புலிகளின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டமை குறித்து, தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளிடம் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு நேற்று யாழ்ப்பாணத்தில் உள்ள விடுதி ஒன்றில் இடம்பெற்றது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் நடந்த இந்த நிகழ்வில் விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல்கள் ஒலிக்க விடப்பட்டன.
இது தொடர்பாக சிறிலங்கா காவல்துறையிடம் முறைப்பாடுகள் ஏதும் பதிவு செய்யப்படாத போதிலும், இந்தச் சம்பவம் தொடர்பாக சிறப்பு விசாரணைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் ஏற்கனவே விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சர்வதேச அரங்கில் விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்திய சிறிலங்கா சுதந்திரக் கட்சி யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக, விடுதலைப் புலிகளைப் பயன்படுத்த முயன்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதேவேளை, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் இந்த அணுகுமுறை தென்னிலங்கை அரசியலிலும் கடும் எதிர்ப்பலைகளை தோற்றுவித்துள்ளது.