மேலும்

சிறிலங்காவில் இருந்து தேயிலையை இறக்குமதி செய்வதற்கு ரஷ்யா தடைவிதிப்பு

teaசிறிலங்காவில் இருந்து தேயிலை உள்ளிட்ட அனைத்து விவசாய உற்பத்திப் பொருட்களையும் இறக்குமதி செய்வதற்கு ரஷ்யா தற்காலிக கட்டுப்பாடு விதித்துள்ளது.

எதிர்வரும் 18ஆம் நாள் தொடக்கம் இந்த தற்காலிக கட்டுப்பாடு நடைமுறையில் இருக்கும் என்று ரஷ்யாவின் விவசாய பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பான Rosselkhoznadzor தெரிவித்துள்ளது.

சிறிலங்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தேயிலைத் தொகுதி ஒன்றில் கஹப்ரா வண்டு எனப்படும், பூச்சி கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்தே, கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, Rosselkhoznadzor தெரிவித்துள்ளது.

இதனிடையே, ரஷ்யா தேயிலை உற்பத்தியாளர் சங்கமான ரஷ்யாகொபியின் உறுப்பினர்கள், சிறிலங்காவில் இருந்து கடுமையான கட்டுப்பாடுகளுடன் தேயிலை இறக்குமதியை மீண்டும் ஆரம்பிக்குமாறு, Rosselkhoznadzor இடம் கோரவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

2017ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களிலும் ரஷ்யா 436 மில்லியன் டொலர் பெறுமதியான 141,300 தொன் தேயிலையை இறக்குமதி செய்திருக்கிறது.

ரஷ்யாவின் தேயிலைச் சந்தையில் 23 வீதத்தை சிறிலங்கா தேயிலையே ஈடு செய்து வரும் நிலையில், இந்த கட்டுப்பாடு சிறிலங்காவுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறிலங்கா தேயிலைக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டினால், ரஷ்ய தேயிலைச் சந்தையில் சிறிலங்காவுடன் போட்டி போடும், இந்தியா, கென்யா, சீனா, வியட்னாம் ஆகிய நாடுகளுக்கு சாதகமான நிலை ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *