தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பாகியது உதயசூரியன் கூட்டணி
ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியுடன், ஈபிஆர்எல்எவ் இணைந்து உருவாக்கியுள்ள தேர்தல் கூட்டணிக்கு, தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்று பெயரிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் ஈபிஆர்எல்எவ் கட்சியின் தலைவர் க.சுரேஸ் பிரேமச்சந்திரன் இந்தத் தகவலை வெளியிட்டார்.
உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக, தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் ஈபிஆர்எல்எவ் அண்மையில் கூட்டணி உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டிருந்தது.
உதயசூரியன் சின்னத்தில் இந்தக் கூட்டணி உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த தேர்தல் கூட்டணிக்கு, தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்று பெயரிடப்பட்டுள்ளதாக சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.
இந்தக் கூட்டமைப்பில், ஈரோஸ் அமைப்பின் அரசியல் பிரிவாக இயங்கிய ஈழவர் ஜனநாயக முன்னணியும் இணைந்து கொள்ளவுள்ளதாகவும், சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.