தாமதமாகும் உள்ளூராட்சித் தேர்தல் – கண்காணிப்பு அமைப்புகள் அதிருப்தி
உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவதில் ஏற்பட்டுள்ள இழுபறிகள் குறித்து, தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள், தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மகிந்த தேசப்பிரியவிடம் அதிருப்தி வெளியிட்டுள்ளன.
பவ்ரல், கபே, தேசிய தேர்தல் கண்காணிப்பு நிலையம், சுதந்திரமான நியாயமான தேர்தலுக்கான அமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகள் நேற்று சிறிலங்கா தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மகிந்த தேசப்பிரியவைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இதன் போதே, மூன்று மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படாமை குறித்து அதிருப்தி வெளியிட்டனர்.
உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சு, உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை வெளியிடாத வரையில் தேர்தலுக்கான நடவடிக்கைகளை தம்மால் முன்னெடுக்க முடியாது என்று தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
“இதுதொடர்பான வரைவு வர்த்தமானி என்னிடம் சமர்ப்பிக்கப்பட்டது. எனினும், அதனை வெளியிட வேண்டிய பொறுப்பு உள்ளூராட்சி, மாகாணசபைகள் அமைச்சுக்கே உரியது.
அந்த வர்த்தமானி வெளியிடப்பட்ட பின்னர் தேர்தலை நடத்துவதற்கு 50- 75 நாட்கள் கால அவகாசம் எமக்குத் தேவைப்படும்.
அடுத்த ஆண்டு ஜனவரி 14ஆம் நாள் வரவுள்ள தைப்பொங்கலுக்கு முன்னர் தேர்தலை நடத்த எந்தத் தடையும் இல்லை.
கபொத சாதாரண தரத் தேர்வுகள் நடந்து கொண்டிருக்கும் போதும், ஆண்டின் கடைசி நான்கு நாட்களிலும், அரச பணியாளர்களை தேமர்தல் கடமைக்குப் பயன்படுத்த முடியாது என்பதால் அந்தக் காலப்பகுதியில் தேர்தலை நடத்த முடியாது என்பதே எனது கரிசனை.
அதற்குப் பின்னர் எந்த நாளிலும் தேர்தலை நடத்தலாம்.” என்றும் தேர்தல்கள் ஆணைக்கு தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.