மேலும்

தாமதமன்றி அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்- சிறிலங்கா அதிபருக்கு சம்பந்தன் அவசர கடிதம்

sampanthan-rதமிழ் அரசியல் கைதிகளை தாமதமன்றி உடனடியாக  விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, தமிழ்த் தேசவியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக வடக்கில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படும் நிலையில், இரா.சம்பந்தன் நேற்று சிறிலங்கா அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், அரசியல் கைதிகள் தொடர்பான சில வழக்குகள் வவுனியாவில் இருந்து அனுராதபுரவுக்கு மாற்றப்பட்டதன் மூலம் சில தேவையற்ற முரண்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சாட்சிகளுக்குப் பாதுகாப்பு அவசியமாயின் வழக்குகளை இடமாற்றம் செய்யாமல், சாட்சிகளுக்கான பாதுகாப்புக்களை வழங்கியிருக்க முடியும்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் கொடூரமான, வெறுக்கத்தக்க ஒரு சட்டம் என்பதும் அது காலத்துக்குப் பொருத்தமற்றதென்பதும் சிறிலங்கா அரசினால் உள்நாட்டிலும் அனைத்துலக ரீதியிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்தை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக உள்நாட்டு மற்றும் அனைத்துலக நியமங்களுக்கு ஏற்புடைய வகையில் புதிய சட்டமொன்றை உருவாக்கப் போவதாக உள்நாட்டிலும் அனைத்துலக மட்டத்திலும் சிறிலங்கா அரசாங்கம் உறுதி வழங்கியிருந்தது.

இவ்வாறான நிலையில், தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து  அரசியல் கைதிகளும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

உறுதியளிக்கப்பட்ட கடப்பாட்டை அரசு இன்னமும் நிறைவேற்றவில்லை. ஆனாலும், இதன்மூலம் குறித்த சட்டம், சட்டப் புத்தகங்களில் தொடர்ந்திருக்க மாட்டாதென்ற சிறிலங்கா அரசின் உறுதியளிக்கப்பட்ட கடப்பாட்டிலிருந்து தவற முடியாது.

பெரும்பாலானவர்களுக்கு எதிராக இருக்கும் ஒரேயொரு சான்று அவர்களின் விருப்பத்துக்கு மாறாகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலமாகும். அது சாதாரணமான நீதிமன்றத்தில் அவர்களுக்கு எதிரான சாட்சியமாக ஏற்கப்பட மாட்டாது.

இதனால் வழக்குத் தொடுநர்களிடம் போதிய சாட்சியங்கள் இல்லாமை காரணமாக அனேக வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.

இவர்கள் எல்லோருமே கைது செய்யப்பட்டவுடன் குற்றத் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தால் சிறைவாசம் அனுபவிக்க வேண்டிய காலத்தைப் போன்ற நீண்டகாலத்திற்குத் தடுப்புக்காவல் கைதிகளாகவே இருக்கின்றனர்.

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பங்கள் அவர்களின் உழைப்பாளிகளின் ஆதரவு இல்லாமல், நீண்டகாலமாக வேதனையில் வாடுகின்றன.

வழக்குகள் முழுமையாகச் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பொறுப்பில் உள்ளன என்று கருத முடியாது.

அரசின் முதன்மைச் சட்ட ஆலோசகர் என்ற வகையில் சட்டமா அதிபருக்குரிய கௌரவத்தை வழங்கும் அதேவேளை, இவ்வழக்குகள் அரசியல் அடையாளங்களையும் கொண்டிருப்பதனால் இவை முழுமையாகச் சட்டம் சம்பந்தப்பட்டவையென்று கருதிவிட முடியாது.” என்றும் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *