ரொஹிங்யா அகதிகளுக்கு எதிராக கல்கிசையில் பௌத்த பிக்குகள் போர்க்கொடி
மியான்மாரின் ரொஹிங்யா அகதிகளை சிறிலங்காவில் தங்க வைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ரொஹிங்யா அகதிகள் தங்கியிருந்த வீட்டை பௌத்த பிக்குகள் அடங்கிய அடிப்படைவாதிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ரொஹிங்யா அகதிகள் பயணித்த படகு ஒன்று கடந்த ஏப்ரல் மாதம் காங்கேசன்துறை கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது. அதில் இருந்த 16 சிறுவர்கள், 7 பெண்கள் உள்ளிட்ட ரொஹிங்யா அகதிகளை, நீதிமன்றத்தில் நிறுத்தியபோது, அவர்களை மீரிஹான தடுப்பு முகாமுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டது.
மீரிஹான தடுப்பு முகாமில் இருந்த அவர்களை அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையர் பணியக அதிகாரிகளால், பொறுப்பேற்கப்பட்டு கல்கிசைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
அந்த வீட்டை முற்றுகையிட்ட பௌத்த பிக்குகள் அடங்கிய அடிப்படைவாதிகள், ரொஹிங்யா முஸ்லிம்களை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று முழக்கமிட்டனர்.
இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. அங்கு விரைந்த சிறிலங்கா காவல்துறையினர், அகதிகள் அனைவரையும், காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு தங்க வைக்க இடமில்லாத நிலையில், அகதிகள் பூசா தடுப்பு முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சிறிலங்காவில் ரொஹிங்யா அகதிகள் இல்லை என்றும், எந்த நாட்டு அகதிகளுக்கும் சிறிலங்காவில் இடமளிக்கப்படாது என்றும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்தவாரம் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிறிதொரு நாட்டில் இருந்து வந்த அகதிகளுக்கான அந்தஸ்தை மறுப்பவர்கள் இங்குள்ள சிறுபாண்மையினரை எப்படி நடாத்துவார்கள்?????????????