மகிந்தவின் ‘மூவரணி’யில் ஒருவரான லலித் வீரதுங்கவுக்கு 3 ஆண்டு கடூழியச் சிறைத்தண்டனை
சிறிலங்காவின் முன்னாள் அதிபரின் செயலர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்கு கொழும்பு மேல்நீதிமன்றம் 3 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
2015ஆம் ஆண்டு அதிபர் தேர்தலின் போது, தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவுக்குச் சொந்தமான, 600 மில்லியன் ரூபாவை தவறான முறையில் கையாண்டு , தேர்தல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தியதாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்தே, இவர்களுக்கு இந்த தண்டணை விதிக்கப்பட்டுள்ளது.
லலித் வீரதுங்கவும், அனுஷ பல்பிட்டவும் குற்றவாளிகளாக காணப்பட்டதை அடுத்து, 3 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனையுடன், தலா 2 மில்லியன் ரூபா அபராதத்தையும் நீதிமன்றம் விதித்துள்ளது,
அத்துடன் இரண்டு பேரும் தலா 50 மில்லியன் ரூபாவை, தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும், கொழும்பு மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இறுதிக்கட்டப் போரின் போது, இராணுவ நடவடிக்கைகளுக்கு ஏற்படும் தடைகளை அகற்றுவதற்காக, இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் மூவரணிகள் அமைக்கப்பட்டிருந்தன.
அதில் பசில் ராஜபக்ச, கோத்தாபய ராஜபக்ச ஆகியோருடன், சிறிலங்கா அதிபரின் செயலராக இருந்த லலித் வீரதுங்கவும் ஒரு உறுப்பினராக இடம்பெற்றிருந்தார்.
இந்தியா தரப்பில் சிவ்சங்கர் மேனன், எம்.கே.நாராயணன், விஜய்சிங் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.