பல்கேரியாவுக்கு 10 மில்லியன் டொலருக்கு ஆயுத தளபாடங்களை விற்கிறது சிறிலங்கா
பல்கேரியாவுக்கு 10 மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுத தளபாடங்களை விற்பனை செய்யும் உடன்பாடு ஒன்றில் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு கையெழுத்திட்டுள்ளது.
நேற்றுமுன்தினம் இந்த உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
போர் முடிவுக்கு வந்த பின்னர், சிறிலங்கா பாதுகாப்பு படையினரின் வசமுள்ள, 264 வகையான இராணுவப் பயன்பாட்டுப் பொருட்களை விற்பனை செய்வதற்கு, பட்டியலிடப்பட்டது.
இவ்வாறு பட்டியலிடப்பட்ட பொருட்களில் மூன்று வகையான ஆயுததளபாடங்களையே பல்கேரியாவுக்கு விற்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இது மொத்த ஆயுதக் கையிருப்பின் 2 சதவீதம் மாத்திரமே என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, எஞ்சிய ஆயுத தளபாடங்களின் விற்பனையை சிறிலங்காவின் தற்போதைய பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன இடைநிறுத்தி வைத்துள்ளார். கேள்விப்பத்திரம் கோரி ஆயுதங்களை விற்பனை செய்யும் நடைமுறையைப் பின்பற்றுவதற்காகவே அவர் இதனை இடைநிறுத்தியுள்ளார்.
சலாவ ஆயுதக்களஞ்சியத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தை அடுத்து. ஆயுதங்களைக் களஞ்சியப்படுத்தி வைப்பதில் உள்ள பிரச்சினை காரணமாக, மேலதிக ஆயுதங்களை விற்பனை செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.