யாழ். கடலேரியில் படகு கவிழ்ந்து 6 மாணவர்கள் பலி
யாழ்ப்பாணக் கடலேரியில் மண்டைதீவை அண்டிய சிறுத்தீவு பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற படகு விபத்தில் உயர்தர வகுப்பு மாணவர்கள் ஆறு பேர் உயிரிழந்தனர்.
கபொத உயர்தரத் தேர்வு எழுதிய மாணவர்கள் ஏழு பேர் தேர்வு முடிந்ததைக் கொண்டாடும் வகையில், இன்று மதியம் மண்டைதீவு படகுத் துறையில் இருந்த படகு ஒன்றில் சுற்றுலா சென்றனர். இவர்களின் படகு இன்று பிற்பகல் 1.35 மணியளவில், கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் ஆறு மாணவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். ஒரு மாணவன் மாத்திரம் நீந்திக் கரை சேர்ந்துள்ளார்.
உயிரிழந்த மாணவர்கள் ஆறு பேரும் நல்லூர், கொக்குவில், உரும்பிராய் பகுதிகளைச் சேர்ந்த – 18 வயதுக்கும் 20 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்று தெரியவருகிறது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் கடற்படையினர் மற்றும் மீனவர்களின் உதவியுடன் மீட்கப்பட்டு யாழ். போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
உயிரிழந்த மாணவர்களின் உறவினர்கள் யாழ். போதனா மருத்துவமனையில் குவிந்துள்ளதால், சோகமயமாக காட்சியளிக்கிறது.
அதேவேளை, இந்த விபத்தில் நீந்திக் கரைசேர்ந்த மாணவன் உள்ளிட்ட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.