சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன் அமெரிக்க தூதுவர் சந்திப்பு
சிறிலங்காவின் புதிய வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவை, சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் இன்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹிஷினி கொலன்னே தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இரண்டு நாடுகளின் வெளிவிவகார அமைச்சுக்கள் மற்றும் மக்களுக்கிடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கான வழிவகைகள் குறித்து, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன் கலந்துரையாடியதாக, அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் கூறியுள்ளார்.
இந்தச் சந்திப்பில் அமெரிக்க துணைத் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் மற்றும் சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் பிரசாத் காரியவசம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
சிறிலங்காவின் புதிய வெளிவிவகார அமைச்சருக்கும் அமெரிக்கத் தூதுவருக்கும் இடையிலான முதலாவது சந்திப்பு இதுவாகும்.