விஜேதாச ராஜபக்ச அமைச்சரவைக் கூட்டத்துக்கு வரவில்லை
சிறிலங்கா அமைச்சரவையில் இருந்து வெளியேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச, நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சரவைக் கூட்டுப் பொறுப்பை மீறினார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும், நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்சவை அமைச்சரவையில் இருந்து நீக்குமாறு, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றக் குழு நேற்று முன்தினம் ஒருமனதாக தீர்மானித்தது.
இந்த முடிவு நேற்று முன்தினம் இரவு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, விஜேதாச ராஜபக்சவை அமைச்சரவையில் இருந்து நீக்குவதற்கு சிறிலங்கா அதிபரே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த விடயத்தில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்னமும் எந்த முடிவையும் அறிவிக்காத நிலையில், நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் விஜேதாச ராஜபக்ச பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.