இராணுவத்தை விட்டு ஓடியவர்களால் சமூகத்துக்கு அச்சுறுத்தல் – சிறிலங்கா இராணுவத் தளபதி
சிறிலங்கா இராணுவத்தை விட்டுத் தப்பியோடியவர்களுக்கு எந்தவொரு சூழ்நிலையிலும், தனியார் துறை நிறுவனங்கள் வேலை வாய்ப்புகளை வழங்கக் கூடாது என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்தவாரம் ஒரே நாளில் நாடெங்கும் நடத்தப்பட்ட தேடுதலில் 770 வரையான தப்பியோடிய சிறிலங்கா இராணுவத்தினர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க,
“சிறிலங்கா இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர்களால், சமூகத்துக்கு அச்சுறுத்தல் உள்ளது.
இவர்கள் பற்றிய தகவல்களை பொதுமக்கள் அருகில் உள்ள காவல் நிலையத்திலோ, இராணுவ முகாமிலோ அளிக்க முடியும்.
சிறிலங்கா இராணுவத்தை விட்டுத் தப்பியோடியவர்களுக்கு எந்தவொரு சூழ்நிலையிலும், தனியார்துறை நிறுவனங்கள் வேலை வாய்ப்புகளை வழங்கக் கூடாது.
அவ்வாறு வேலை வாய்ப்புகளை வழங்குபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் ” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.