ஜனவரியில் தனித்து ஆட்சியமைக்கத் தயாராகிறது ஐதேக – உடைகிறது கூட்டு அரசு?
அடுத்த ஆண்டில், கூட்டு அரசாங்கத்தில் இருந்து வெளியேறி தனித்து ஆட்சி அமைப்பது குறித்து, ஐக்கிய தேசியக் கட்சி ஆலோசித்து வருவதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அண்மைய சில செயற்பாடுகள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கூட்டுஎதிரணியின் தூண்டுதலின் பேரில், அவ்வாறு நடந்து கொள்வதாக ஐதேக சந்தேகிக்கிறது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் நாட்டின் அரசியல் நிலவரங்கள் தொடர்பாக, கலந்துரையாடியுள்ளனர்.
ஒரே கூட்டு அரசாங்கத்தில் இருந்தாலும், சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பலரும், ஐதேகவை தாக்கி வருகின்றனர்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் ஐதேக தொடர்ந்து கூட்டணி வைத்துக் கொண்டால், தாம் பதவி விலகுவோம் என்று ஐதேக அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் சிலர், எச்சரித்துள்ளனர் என்றும் அறியப்படுகிறது.
இந்த நிலையிலேயே, டிசெம்பர் 31ஆம் நாளுடன், சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து அமைத்து கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகி, தனித்து ஆட்சியமைப்பது குறித்து ஐதேக ஆலோசித்து வருகிறது என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.