முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் கரன்னகொட அடுத்த சில நாட்களில் கைது?
சிறிலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட அடுத்த சில நாட்களுக்குள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்படவுள்ளார் என்று ராவய வாரஇதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 2008-2009 காலப்பகுதியில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாகவே இவர் கைது செய்யப்படவுள்ளார்.
கடத்தப்பட்ட தமிழ் இளைஞர்கள் திருகோணமலை கன்சைட் முகாமில், சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட அறிந்திருந்தார் என்று கோட்டே நீதிவானுக்கு நேற்று முன்தினம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அறிவித்திருந்தனர்.
இந்தக் கடத்தல்கள் தொடர்பாக, கொமடோர் உதய கீர்த்தி, கொமடோர் தசநாயக்க, லெப்.கொமாண்டர் ரணசிங்க, முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் குருகே மற்றும் அப்போது கடற்படையின்உயர் அதிகாரிகளாக இருந்த பலரும் அறிந்திருந்தனர் என்றும் குற்றப் புலனாய்வுப்பிரிவினர் தகவல் வெளியிட்டிருந்தனர்.
லெப்.கொமாண்டர் ஹெற்றியாராச்சியே கொலைகளைச் செய்தார் என்றும் எனினும், தனிப்பட்ட விரோதம் காரணமாக சம்பத் முனசிங்கவுக்கு எதிராக முன்னாள் பிரதி காவல்துறை மா அதிபர் அனுர சேனநாயக்கவிடம் முறைப்பாடு செய்திருந்தார் என்றும் அவர்கள் கூறியிருந்தனர்.
கைது செய்யப்பட்ட கடற்படையினரிடம் அட்மிரல் கரன்னகொட தொடர்பான தகவல்களை அறிந்துள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.