அடுத்த வெளிவிவகார அமைச்சர் சரத் அமுனுகம?
சிறிலங்காவின் அடுத்த வெளிவிவகார அமைச்சராக கலாநிதி சரத் அமுனுகம நியமிக்கப்படக் கூடும் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மத்திய வங்கி பிணைமுறி விற்பனை சர்ச்சையில் சிக்கியுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க பதவி விலகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், அடுத்த வெளிவிவகார அமைச்சர் யார் என்பது குறித்த கேள்விகளும் எழுந்துள்ளன.
ஐதேகவைச் சேர்ந்த திலக் மாரப்பன அடுத்த வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்படுவார் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று நேற்று செய்தி வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில், கலாநிதி சரத் அமுனுகமவே அடுத்த வெளிவவகார அமைச்சராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக, அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி மற்றொரு ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.
கூட்டு அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக ஐதேகவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் செய்து கொண்ட உடன்பாட்டின் அடிப்படையில், வெளிவிவகார அமைச்சுப் பதவி ஐதேகவுக்கு உரியதாகும்.
தற்போதைய சூழ்நிலையில் அனைத்துலக விவகாரங்களில் அனுபவம் கொண்ட ஒருவரையே இந்தப் பதவிக்கு நியமிக்க வேண்டும் என்பதால், வெளிவிவகார அமைச்சராக கலாநிதி சரத் அமுனுகமவை நியமிப்பதற்கு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இதற்கமைய, கலாநிதி சரத் அமுனுகமவிடம் தற்போதுள்ள அமைச்சுப் பதவிகள் திலக் மாரப்பனவிடம் கையளிக்கப்படும். என்றும் கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே, நவீன் திசநாயக்க வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்படவுள்ளார் என்று அரசாங்க அமைச்சர் ஒருவரால் நடத்தப்படும் வாரஇதழ் ஒன்றில் கூறப்பட்டுள்ளது.