கிழக்கு கொள்கலன் முனையம் இந்தியாவுக்கு இல்லை – கைவிரித்தது சிறிலங்கா
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை தனியார் மயப்படுத்தவோ, பொதுத்துறை மற்றும் தனியார்துறை கூட்டுமுயற்சியாக அபிவிருத்தி செய்யவோ போவதில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
“கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையம் எந்தவொரு தரப்பிடம் வழங்கப்படாது. தொடர்ந்தும் அதனை துறைமுக அதிகாரசபையே செயற்படுத்தும்.
கிழக்கு கொள்கலன் முனையத்தை எந்தவொரு தரப்பிடம் கொடுக்க முடியாது. ஏனென்றால், அந்த நடவடிக்கை, துறைமுக அதிகார சபையை இன்னும் 10 ஆண்டுகளில் முடிவிடும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்குவதைச் சமப்படுத்தும் வகையில் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு முன்னர் அரசாங்கம் இணங்கியிருந்தது.
இந்த நிலையிலேயே சிறிலங்கா அதிபரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.