சர்வேஸ்வரன், அனந்திக்கு 3 மாதங்களுக்கு தற்காலிக அமைச்சர் பதவி – விக்கி அறிவிப்பு
வடக்கு மாகாணசபையின் கல்வி அமைச்சராக கலாநிதி சர்வேஸ்வரனையும், பெண்கள் விவகார அமைச்சராக அனந்தி சசிதரனையும், 3 மாதங்களுக்கு, தற்காலிக அடிப்படையில் நியமிக்க முடிவு செய்திருப்பதாக, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி்.வி.விக்னேஸ்வரன், இன்று மாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும், தமிழ் அரசுக் கட்சியைச் சாராத உறுப்பினர்களுக்கான கூட்டம் ஒன்றை தனது இல்லத்தில் நடத்தினார்.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் தகவல் வெளியிட்ட அவர், “இந்தச் சந்திப்பின் போது தற்போதைய பிரச்சினைகள் தொடர்பாக இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா உள்ளிட்டவர்களுடன் நடத்திய பேச்சுக்கள் தொடர்பாக விபரித்துக் கூறினேன்.
அத்துடன், அமைச்சர்கள் தொடர்பான விசாரணை, மீளாய்வு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாகவும், தற்போதுள்ள நிலையில், எல்லா அமைச்சுக்களைக் கவனித்துக் கொள்வதில் உள்ள சிக்கல்கள் குறித்தும் விளங்கப்படுத்தினேன்.
கட்சி ரீதியான தீர்மானங்கள், மாவட்ட ரீதியான விவகாரங்கள் தொடர்பாக கட்சித் தலைமைகளுடன் பேச வேண்டியிருப்பதால், தற்காலிகமாக சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது.
அமைச்சர்கள் தொடர்பான விசாரணைகள் , மீளாய்வு, மற்றும் அரசியல் ரீதியான கலந்துரையாடல்கள் முடியும் வரையில் – தற்காலிக அடிப்படையில் கல்வி அமைச்சராக கலாநிதி சர்வேஸ்வரனையும், பெண்கள் விவகாரம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளுக்கான அமைச்சராக அனந்தி சசிதரனையும் நியமிக்க முடிவு செய்துள்ளேன்.
மூன்று மாதங்களுக்கு இந்த நியமனம் நடைமுறையில் இருக்கும் என்று சம்பந்தப்பட்டவர்களுக்கு கூறியிருக்கிறேன். ஆனால், அவர்கள் அமைச்சர்களாக செயற்படுவார்கள்.
விவசாய அமைச்சு எனது கண்காணிப்பில் இருக்கும். இந்த நடைமுறைகளால் எந்த பிரச்சினைகளும் வராது” என்று கூறினார்.
அதேவேளை, நாளை காலை 10 மணியளவில் கல்வி அமைச்சராக சர்வேஸ்வரனும், பெண்கள் விவகார அமைச்சராக அனந்தி சசிதரனும், வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, இன்று யாழ். நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், தம்மை அமைச்சராகப் பதவியேற்க முடியுமா என்று முதலமைச்சர் கேட்டதாகவும், ஆனால் தாம் அதனை நிராகரித்து விட்டதாகவும் கூறி்னார்.
அதேவேளை, கல்வி அமைச்சர் பதவிக்கு இம்மானுவல் ஆர்னோல்ட்டை நியமிக்குமாறு முதலமைச்சருக்கு தமிழ் அரசுக் கட்சி பரிந்துரைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.