மேலும்

அமெரிக்காவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாட்டை புதுப்பிக்க சிறிலங்கா விருப்பம்

USA-SriLanka-Flagஅமெரிக்காவுடன் 2007ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட, பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாட்டை புதுப்பித்துக் கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர்,

‘2007ஆம் ஆண்டு அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்பட்ட கையகப்படுத்தல் மற்றும் குறுக்குச் சேவைகள் உடன்பாடு இந்த ஆண்டு காலாவதியாகியுள்ளது. இதனை புதுப்பிக்க சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இந்த உடன்பாடு பாதுகாப்புத் துறையில் சிறிலங்காவின் ஆற்றலை வலுப்படுத்தும். அத்துடன் சிறிலங்கா படைகளுக்கு பயிற்சி மற்றும், திறன் விருத்தி வாய்ப்புகள் கிடைக்கும். இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இயங்குதிறன் அதிகரிக்கும்.

இந்த உடன்பாட்டின் மூலம், அமைதிகாப்பு நடவடிக்கைகள், மனிதாபிமான நடவடிக்கைகள், கூட்டுப் பயிற்சிகளின் போது, இடமாற்ற, விநியோக பரிமாற்ற, உதவி, மற்றும் எரிபொருள் மீளநிரப்பல் சேவைகளை வழங்குவதற்கு வழிவகுக்கும்.

தற்போதுள்ள அனைத்துலக அரசியல் சூழலில் இந்த உடன்பாடு எமது நாட்டுக்கு சாதகமானது.

தொழில்நுட்ப விவகாரங்கள் தொடர்பாக அமெரிக்க பிரதிநிதிகளுடன், முப்படைகளின் தளபதிகள், கடலோரக் காவல் படை பணிப்பாளர், மற்றும் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் கலந்துரையாடிய பின்னர், இது தொடர்பாக அமெரிக்காவுடன் பல சுற்று பூர்வாங்கப் பேச்சுக்கள் நடத்தப்பட்டன.

இந்த உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு, தமக்கு மேலும் காலஅவகாசம் தேவைப்படுவதாக அமெரிக்க அரசாங்கம் சிறிலங்கா அரசாங்கத்துக்கு தகவல் அனுப்பியுள்ளது.

முன்னைய உடன்பாடு போல  காலவரையறை ஒன்றை இந்தப் புதிய உடன்பாடு கொண்டிருப்பதற்கு வாய்ப்பில்லை. 180 நாட்கள் முன்னறிவித்தல் கொடுத்து இதில் இருந்து விலக்கிக் கொள்ளும் விதிமுறையும் சேர்க்கப்படும்.

உடன்பாடு வரையப்பட்ட பின்னர் அது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். அது தொடர்பாக விவாதமும் நடத்தலாம். அணிசேரா கொள்கையை விட்டு எமது வெளிவிவகாரக் கொள்கை விலகிச் செல்லாது” என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *