ஐ.எஸ் தீவிரவாத சவால்களை எதிர்கொள்வது குறித்து இந்தியா- சிறிலங்கா இடையே பேச்சு நடத்த இணக்கம்
தெற்காசியாவில் அதிகரித்து வரும் ஐ.எஸ் தீவிரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்வது குறித்து, இந்தியாவும் சிறிலங்காவும் பேச்சுக்களை நடத்தவுள்ளன.
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், இந்தியாவின் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று நடத்திய பேச்சுக்களின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நேற்று பிற்பகல் புதுடெல்லியில் நடந்த இந்தச் சந்திப்பின் போது, ஐ.எஸ் தீவிரவாத அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவது குறித்து இரண்டு நாடுகளின் தலைவர்களும் கவலை வெளியிட்டனர்.
அத்துடன்,பிராந்தியத்தின் அமைதி மற்றும் உறுதிப்பாட்டைக் குழப்புவதற்கான ஐ.எஸ் தீவிரவாதிகளின் முயற்சிகளை முறியடிப்பது குறித்து இரண்டு நாடுகளின் பாதுகாப்பு அமைப்புகளுக்கு இடையில் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை நடத்தவும் இரு தலைவர்களும் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.