மேலும்

இந்தியாவில் பயிற்சியில் ஈடுபட்ட சிறிலங்கா கடற்படை அதிகாரி நீரில் மூழ்கிப் பலி

us-train-sln (6)இந்தியாவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா கடற்படை அதிகாரி ஒருவர் நீரில் மூழ்கி மரணமானார். கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளத்தில் நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

கொச்சியில் உள்ள இந்திய கடற்படைப் பயிற்சி மையத்தில் ஏப்ரல் 3ஆம் நாள் தொடக்கம் பயிற்சியை மேற்கொண்டு வந்த சிறிலங்கா கடற்படை அதிகாரியான பெற்றி ஒவ்விசர் வீரசிங்க என்ற இளநிலை அதிகாரியே நீரில் மூழ்கி மரணமானவராவார்.

நேற்று இவர் உள்ளிட்ட கடற்படைப் பயிற்சியாளர்கள் எர்ணாகுளம் கால்வாயில் சுழியோடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

சுழியோடுவதற்காக இறங்கிய சிறிலங்கா கடற்படை அதிகாரி மீளத் திரும்பாததை அடுத்து, உடனடியாக தேடுதல் மேற்கொள்ளப்பட்டது. அப்போது நினைவிழந்த நிலையில் நீருக்கு அடியில் அவர் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டார்.

ஆபத்தான நிலையில் கடற்படை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் மாலை 3 மணியளவில் மரணமானார் என்று இந்தியக் கடற்படை தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக சிறிலங்கா கடற்படைக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும், விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் இந்திய கடற்படையினர் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *