மேலும்

கபொத சா. தரத் தேர்வு முடிவு- முதல் 25 கல்வி வலயங்களில் வடக்கிற்கு இடமில்லை

examஅண்மையில் வெளியாகிய கபொத சாதாரண தரத் தேர்வு முடிவுகளின்படி, மாணவர்களின் தேர்ச்சி வீதத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள முதல் 25 இடங்களைப் பிடித்த கல்வி வலயங்களின் பட்டியலில் வடக்கு மாகாணத்தின் எந்தவொரு கல்வி வலயமும் இடம்பெறவில்லை.

2016ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் நடந்த கபொத சாதாரணதரத் தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டன.

இந்த தேர்வு முடிவுகளின் அடிப்படையில், நாடெங்கும் உள்ள 98 கல்வி வலயங்களில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் வீதத்தை அடிப்படையாகக் கொண்டு முதல் 25 இடங்களில் உள்ள கல்வி வலயங்களின் பட்டியலை கல்வித் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இதன்படி, வலஸ்முல்ல கல்வி வலயம், 84.70 வீத தேர்ச்சியுடன் முதலிடத்தில் உள்ளது. கண்டி வலயம், 82.79 வீத தேர்ச்சியுடன் இரண்டாமிடத்திலும், முலட்டியான வலயம் 79.74 வீத தேர்ச்சியுடன் மூன்றாமிடத்திலும் உள்ளன.

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த எந்தவொரு கல்வி வலயமும், இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை.

கிழக்கு மாகாணத்தில், அக்கரைப்பற்று கல்வி வலயம் 71.90 வீத தேர்ச்சியுடன் 24 ஆவது இடத்திலும், கல்முனை வலயம் 71.86 வீத தேர்ச்சியுடன் 25 ஆவது இடத்திலும் உள்ளன.

கடந்த 2015ஆம் ஆண்டு நடந்த கபொத சாதாரண தரத்  தேர்விலும் வடக்கு மாகாணத்தின் எந்தவொரு கல்வி வலயமும் முதல் 25 இடங்களுக்குள் இடம்பெற்றிருக்கவில்லை.

எனினும், கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு கல்வி வலயம், 77.70 வீத தேர்ச்சியுடன் 7 ஆவது இடத்திலும், அக்கரைப்பற்று கல்வி வலயம் 76.32 வீத தேர்ச்சியுடன் 11 ஆவது இடத்திலும், கல்முனை வலயம் 74.13 வீத தேர்ச்சியுடன் 17 ஆவது இடத்திலும் இருந்தன.

எனினும், 2016ஆம் ஆண்டு தேர்ச்சியில் கிழக்கு மாகாண கல்வி வலயங்களும் பின்னடைவைச் சந்தித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *