மேலும்

புதிய அரசியலமைப்பு இல்லாமல் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது – சுமந்திரன்

Sumanthiranதேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு புதிய அரசியலமைப்பு அவசியம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

பிபிசி சிங்கள சேவையான சந்தேசயவுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

‘நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சிமுறை ஒழிக்கப்பட வேண்டும். சிறுபான்மையினர் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்கு நிறைவேற்று அதிகார ஆட்சிமுறை  நல்லது என்ற கருத்து சரியானது அல்ல.

தேர்தல்களின் போது சிறுபான்மையினரின் ஆதரவு தேவைப்பட்டாலும் கூட அதிபராகத் தெரிவு செய்யப்படும் ஒவ்வொருவரும் பெரும்பான்மையினருக்காகவே பணியாற்றுகின்றனர். எனவே, இந்த முறையின் ஊடாக சிறுபான்மையினர் நீதியைப் பெற முடியும் என்பது தவறானது.

தமிழ் மக்களின் ஒப்புதலுடன் ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்காமல், தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது.

தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமாயின், புதிய அரசியலமைப்பு அவசியமானது, தற்போதைய அரசியலமைப்போ, இதற்கு முந்திய அரசியலமைப்புகளோ தமிழ் மக்களின் பங்களிப்பின்றியே உருவாக்கப்பட்டவை.

எனவே நாம் புதியதொரு யுகத்துக்குள் நுழைவதானால், நாம் புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது.

பெரும்பான்மையான மக்கள் அரசியலமைப்பை மாற்றுவதில் ஆர்வம் கொண்டிருக்கவில்லை. ஏனென்றால் தலைவர்களை இந்த விடயத்தை மக்களுக்குக் கொண்டு செல்லவில்லை.

இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து உருவாக்கியுள்ள கூட்டு அரசாங்கமானது, புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு இந்த பெறுமதிமிக்க வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *