சிறிலங்காவுக்கு 8 நீர்த்தாங்கிகள், 100 மெட்றிக் தொன் அரிசியை வரட்சி நிவாரணமாக அனுப்பியது இந்தியா
நான்கு பத்தாண்டுகளில் மோசமான வரட்சியைச் சந்தித்துள்ள சிறிலங்காவுக்கு, குடிநீர் விநியோகத்துக்கான நீர்த்தாங்கிகளையும், அரிசியையும் இந்தியா வழங்கியுள்ளது என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
இந்திய நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்துள்ள பதிலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“வரட்சி நிவாரண உதவிகளை வழங்குமாறு சிறிலங்கா அரசாங்கம் விடுத்த வேண்டுகோளை அடுத்து, எட்டு குடிநீர் விநியோக நீர்த்தாங்கிகளையும், 100 மெட்றிக் தொன் அரிசியையும் வழங்க இந்தியா முடிவெடுத்தது.
பாரஊர்திகளில் பொருத்தப்பட்ட எட்டு நீர்த்தாங்கிகள் கடந்த மார்ச் 21ஆம் நாள் சிறிலங்கா அரசாங்கத்திடம் இந்தியாவினால் கையளிக்கப்பட்டன. அயல்நாடுகள் நெருக்கடியில் சிக்கும் போது உதவுகின்ற முதல் நாடு என்ற வகையில் இந்த அவசர உதவியை இந்தியா அனுப்பி வைத்தது.
100 மெட்றிக் தொன் அரிசி விரைவில் சிறிலங்காவுக்கு அனுப்பி வைக்கப்படும்” என்றும் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, சிறிலங்காவுக்கு வரட்சி நிவாரணமாக 10 ஆயிரம் மெட்றிக் தொன் அரிசியை பாகிஸ்தான் அனுப்பி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.