துருவ் உலங்குவானூர்திகளை விற்பது குறித்து சிறிலங்காவுடன் இந்தியா பேச்சு
இந்தியா தனது உள்நாட்டு தயாரிப்பான துருவ் இலகு உலங்குவானூர்தியை சிறிலங்காவுக்கு ஏற்றுமதி செய்வது குறித்த பேச்சுக்களை நடத்தி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநொட்டிக்ஸ் நிறுவனத்தினால், துருவ் என்ற இலகு ரக உலங்குவானூர்தி வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்படுகிறது. பிரான்சின் ரெர்போமெகா நிறுவனத்துடன் இணைந்து, வடிவமைக்கப்பட்ட சக்தி என்ற இயந்திரம் இதில் பொருத்தப்பட்டுள்ளது.
200இற்கும் அதிகமான துருவ் உலங்குவானூர்திகளை இந்தியாவின் முப்படைகளும் பயன்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில், பாதுகாப்பு ஒத்துழைப்புகளை வலுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு கட்டமாக, சிறிலங்கா உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கு துருவ் உலங்குவானூர்திகளை ஏற்றுமதி செய்வது குறித்து இந்தியா கலந்துரையாடி வருகிறது.
சிறிலங்கா, மியான்மார், வியட்னாம் ஆகிய நாடுகளுடன் இது தொடர்பாக பேச்சு நடத்தப்பட்டு வருகிறது என்று, ஹிந்துஸ்தான் ஏரோநொட்டிக்ஸ் நிறுவனத்தின், தலைமை முகாமைத்துவ பணிப்பாளர் ரி.சுவர்ணராஜூ தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இந்தோனேசியாவுடனும் நல்லமுறையில் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், ஏப்ரல் மாதம் இந்திய அதிகாரிகள் ஜகார்த்தா செல்லவுள்ளனர் என்றும், மற்றொரு அதிகாரி தெரிவித்துள்ளார்.