ஜெனிவா தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் – இணை அனுசரணைக்கு பின்னடிப்பு
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்படவுள்ள சிறிலங்கா தொடர்பான தீர்மானத்தை ஆதரிக்க இந்தியா முடிவு செய்திருப்பதாகவும், எனினும், இந்த தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்காது என்றும் புதுடெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்காவுக்கு இரண்டு ஆண்டுகள் காலஅவகாசம் அளிக்கும் இந்த தீர்மானம் அமெரிக்கா, பிரித்தானியா, மொன்ரனிக்ரோ, மசிடோனியா ஆகிய நாடுகளால், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படும் போது, இந்தியா அதனை ஆதரிக்கும்.
சிறிலங்கா இணை அனுசரணை வழங்கிய தீர்மானத்துக்கு கடந்தமுறையும் இந்தியா ஆதரவு அளித்திருந்தது.
அதேவேளை, இந்த தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவையும் சேர்ந்து கொள்ளுமாறு மேற்குலக நாடுகள், அதிகாரபூர்வமற்ற வகையில் இந்தியாவிடம் கோரியிருந்தன.
எனினும், இணை அனுசரணை வழங்குவது, ஒரு பெரிய நகர்வாக இருக்கும் என்று கணித்துள்ள புதுடெல்லி, சாதாரணமாக தீர்மானத்துக்கு ஆதரவு அளித்தால் போதுமானது என்றும் முடிவு செய்துள்ளது.
சிறிலங்காவில் உள்ள பல்வேறு தரப்புகளுடனான சிக்கலான உறவுகளையும், இந்தியாவின் உள்நாட்டு அரசியல் நிலைமைகளையும் கவனமாக ஆராய்ந்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.