அனைத்து துறைகளிலும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த சீனா- சிறிலங்கா இணக்கம்
பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சிறிலங்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்திக் கொள்வதற்கு சிறிலங்கா அதிபரும், சீன பாதுகாப்பு அமைச்சரும் இணங்கியுள்ளனர் என்று சீனாவின் சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் சாங் வான்குவான் சிறிலங்காவுக்கு மேற்கொண்டிருந்த பயணத்தின் போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
மார்ச் 19ஆம் நாள் கொழும்புக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சீன பாதுகாப்பு அமைச்சர், மறுநாள் மார்ச் 20ஆம் நாள், சிறிலங்கா அதிபர் மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியிருந்தார்.
இந்தச் சந்திப்பின் போது, சிறிலங்காவுக்கு பொருளாதார, விவசாய, விஞ்ஞான, கைத்தொழில் மற்றும் பாதகாப்புத் துறை சார்ந்த உதவிகளை சீனா வழங்கி வருவதற்கு சிறிலங்கா அதிபர் நன்றியைத் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, சீனாவுக்கு சிறிலங்கா அளித்து வரும் ஆதரவுக்கு, குறிப்பாக, சீனாவின் நலன்கள் சார்ந்த விடயங்களில் அளித்து வரும் ஆதரவுக்கு சீன பாதுகாப்பு அமைச்சர் நன்றிதெரிவித்தார்.
21 ஆம் நூற்றாண்டு பட்டுப் பாதைத் திட்டத்தில் சிறிலங்கா முக்கியமான ஒரு நாடு என்றும், இரண்டு நாடுகள் மற்றும் மக்களுக்கும் நன்மையளிக்கும் வகையிலான அபிவிருத்தியில் சிறிலங்காவுடன் இணைந்து பணியாற்ற சீனா விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவுடன் நடத்திய பேச்சுக்களின் போது, இரண்டு நாடுகளின் இராணுவங்களுக்கும் இடையில் உறவுகளை ஊக்குவிப்பதற்கும், உயர்மட்டத் தொடர்புகளை பேணுவதற்கும், இராணுவ உறவுகளை புதிய உச்சத்துக்குக் கொண்டு செல்வதற்கு ஆழமான ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்வதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளதாக சின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது.
அதேவேளை, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளுக்கு மேலதிகமாக, இராணுவ உதவிகளை அதிகப்படுத்த வேண்டும் என்று சீனாவிடம் சிறிலங்கா கோரியிருப்பதாக இராஜதந்திர வட்டாரங்களை மேற்கொள்காட்டி கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சீன பாதுகாப்பு அமைச்சருடனான சந்திப்பின் போது சிறிலங்கா அதிபர் இந்தக் கோரிக்கையை விடுத்ததாக கூறப்படுகிறது.
போருக்குப் பி்ந்திய தேவைகளை ஈடு செய்யும் வகையில், பாதுகாப்புப் படைகளுக்குத் தேவையான சிறப்பு பயிற்சிகளை அளிக்க சீனாவின் உதவியை சிறிலங்கா அதிபர் கோரியுள்ளார்.
இதற்கு பாதுகாப்பு துறையில் நிபந்தனையற்ற ஆதரைவை தமது நாடு வழங்கும் என்று சீன பாதுகாப்பு அமைச்சர் உறுதியளித்துள்ளார்.