அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனாவின் உரிமையைக் குறைக்கிறது சிறிலங்கா?
சீனாவுக்கு வழங்கத் திட்டமிடப்பட்டிருந்த அம்பாந்தோட்டை துறைமுகத்தின் குத்தகை உரிமையை 80 வீதத்தில் இருந்து 60 வீதமாகக் குறைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீதத்தை, 99 ஆண்டுகளுக்கு குத்தகை அடிப்படையில் சீனாவுக்கு வழங்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டிருந்தது.
சீனாவின் மேர்ச்சன்ட்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு 99 ஆண்டுகளுக்கு 80 வீத குத்தகை உரிமையை வழங்கும் திட்டத்துக்கு துறைமுகங்கள் அமைச்சர அர்ஜூன ரணதுங்க எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.
இந்த நிலையில், அம்பாந்தோட்டை துறைமுகத்தின் குத்தகை உரிமையை 60 வீதமாக குறைக்கும் வகையில புதிய உடன்பாட்டு வரைவு ஒன்று தயாரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வரும் செவ்வாய்க்கிழமை இந்த புதிய உடன்பாட்டு வரைவு சிறிலங்கா அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது.