போர்க்குற்றங்களை நிரூபிக்கிறது மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் நூல் – மங்கள சமரவீர
மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன எழுதியுள்ள ‘நந்திக்கடலுக்கான பாதை’ நூல், சிறிலங்கா ஆயுதப் படைகளுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றுமுன்தினம் நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
பொதுமக்களுக்கு எதிரான வன்முறைகளை படையினர் எவ்வாறு கட்டவிழ்த்து விட்டிருந்தனர் என்பது குறித்து ‘நந்திக்கடலுக்கான பாதை’ நூலில் கூறப்பட்டுள்ள விடயங்களை அவர் மேற்கோள்காட்டி குறிப்பிட்டார்.
படையினர் தமது சகாக்களின் இழப்புக்குப் பழிவாங்கும் விதத்தில், பொதுச்சொத்துக்களை அழித்ததாகவும், அதற்கு எதிராக எந்த நடடவடிக்கையும் எடுக்கப்படாதது அவமானமாக இருப்பதாகவும் கமல் குணரத்ன குறிப்பிட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறு போர்க்குற்றங்களுக்கு உத்தரவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தான் உள்நாட்டு, வெளிநாட்டு மனித உரிமை அமைப்புகள் கோருகின்றன. குற்றமிழைத்தவர்களைத் தண்டிப்பது தவறல்ல.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.