அம்பாந்தோட்டையில் இன்று 10 நாள் கூட்டுப் பயிற்சியை ஆரம்பிக்கிறது அமெரிக்க கடற்படை
அமெரிக்க- சிறிலங்கா போர்க்கப்பல்கள் இன்று தொடக்கம் 10 நாட்கள் அம்பாந்தோட்டை துறைமுகப் பகுதியில் கூட்டுப் பயிற்சி ஒன்றில் ஈடுபடவுள்ளன.
பசுபிக் ஒத்துழைப்பு -2017 என்ற இந்தக் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவதற்காக அமெரிக்க கடற்படையின் அதிவேக போக்குவரத்து கப்பலான போல் ரிவர் நேற்று அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்துள்ளது.
204ஆம் ஆண்டு சுனாமி ஏற்பட்ட பின்னர், பசுபிக் ஒத்துழைப்பு என்ற மனிதாபிமான மற்றும் நிவாரண கூட்டு ஒத்துழைப்பு பயிற்சித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
அம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ள 12 ஆவது பசுபிக் ஒத்துழைப்பு பயிற்சி தெற்காசியாவில் நடத்தப்படும் முதலாவது கூட்டுப் பயிற்சியாகும்.
அமெரிக்க கடற்படைக் கப்பலான போல் ரிவரில் வந்துள்ள 104 அமெரிக்க, ஜப்பானிய, அவுஸ்ரேலிய கடற்படை மரைன் கொமாண்டோக்கள், சிறிலங்கா கடற்படையினருடன் இணைந்துஇந்தக் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடவுள்ளனர். பின்னர் 60 அமெரிக்க கடற்படையினர் மற்றும் மரைன் கொமாண்டோக்கள் இந்தப் பயிற்சியில் இணைந்து கொள்ளவுள்ளனர்.
இந்தியக் கடற்படையின் 8 மருத்துக அதிகாரிகள் மற்றும் குழுவொன்றும் இந்தியக் கடற்படைக் கப்பலான ஐஎன்எஸ் காரியலும் இந்தப் பயிற்சியில் இணைந்து கொள்ளவுள்ளது.
அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் அமெரிக்க கடற்படைக் கப்பலான போல் ரிவரில் இன்று நடக்கும் ஆரம்ப நிகழ்வில் தென்மாகாண ஆளுனர், முதலமைச்சர், தென்மாகாணத்திலுள்ள மாவட்டங்களின் செயலர்கள், பங்கேற்கின்றனர்.
அமெரிக்காவின் பசுபிக் கப்பல்படையின் தளபதி றியர் அட்மிரல் கப்ரியெல்சனும் இந்த நிகழ்வில் பங்கேற்கவுள்ளார்.
இறுதி பயிற்சி நிகழ்வும், சுனாமி அனர்த்தங்களின் போது கடலில் எவ்வாறு உஎதவுவது என்பது குறித்த ஒத்திகையும், வரும் மார்ச் 16ஆம் நாள் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நடைபெறவுள்ளது.
மார்ச் 17ஆம் நாள் ஒத்திகை நிறைவு நிகழ்வு இடம்பெறும். அதையடுத்து, சிறிலங்கா கடற்படையின் எஸஎல்என்எஸ் சமுத்ர கப்பலுடன் இணைந்து அமெரிக்க கப்பல் பயிற்சிகளில் ஈடுபடும்.
மார்ச் 18ஆம் நாள் மியான்மார் நோக்கி அமெரிக்க கப்பலான போல் ரிவர் புறப்பட்டுச் செல்லவுள்ளது.
போல் ரிவர் கப்பல் அம்பாந்தோட்டையில் பயிற்சியில் ஈடுபடும் போது சிறிலங்கா கடற்படையினர் அதில் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளனர்.