பிணையில் விடுவிக்கப்பட்டார் கருணா – வெளிநாடு செல்லத் தடை
800 மில்லியன் ரூபா பெறுமதியான குண்டுதுளைக்காத அரசாங்க வாகனத்தை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, சிறிலங்காவின் முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும், விநாயகமூர்த்தி முரளிதரன் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.
கடந்தமாதம் 29ஆம் நாள் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட கருணாவை இன்று வரையில் விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதம நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், கருணாவைப் பிணையில் விடுவிக்கக் கோரும் மனுவொன்று கொழும்பு பிரதம நீதிவான் முன்னிலையில் நேற்றுமுன்தினம் தாக்கல் செய்யப்பட்ட போது, அதனை நீதிவான் நிராகரித்திருந்தார்.
இன்று மீண்டும் கருணா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவரைப் பிணையில் செல்ல அனுமதித்தார்.
எனினும், கருணா வெளிநாடு செல்வதற்குத் தடைவிதித்த நீதிவான் அவரது கடவுச்சீட்டை முடக்கி வைக்கவும் உத்தரவிட்டார்.
இந்த வழக்கு அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் வரையில் இந்த தடை உத்தரவு நடைமுறையில் இருக்கும்.