தமிழ் மக்களுக்காக ஓங்கிக் குரல் கொடுத்தவர் ஜெயலலிதா – இரா.சம்பந்தன் இரங்கல்
இலங்கைவாழ் தமிழ்மக்களுக்காக ஓங்கிக் குரல் கொடுத்து வந்தவர், தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா என்று, அவரது மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.
“முதலமைச்சர் ஜெயலலிதா அரசியல் வாழ்வில் பல நெருக்கடிகளையும் சோதனைகளையும் சந்தித்தபோதும் அவற்றையெல்லாம் எதிர்கொண்டு மக்கள் சேவையில் தொடர்ந்தும் ஈடுபட்டு மக்கள் மனதில் அழியா இடம்பிடித்த ஒரு தலைவியாக மிளிர்ந்தார்.
காலத்துக்குக் காலம் இலங்கைவாழ் தமிழ்மக்களுக்காக ஓங்கிக் குரல் கொடுத்து வந்த அவர், எமது மக்களது உரிமை தொடர்பில் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதுடன், இந்திய மத்திய அரசுடனும் பேச்சுக்களை நடத்தி வந்தார்.
இலங்கையில் இன்னல்களுக்குள்ளாகி தமது பாதுகாப்புக்கெனத் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்த இலங்கைத் தமிழ் அகதிகளை அரவணைத்து அவர்களுக்கு தனது அரசின் மூலம் வழங்கக்கூடிய அனைத்து உதவிகளையும் வழங்கி அவர்களை வாழவைத்தமையை இவ்வேளையில் நன்றியுடன் நினைவு கூருகின்றேன்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதுடன், அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தமிழக மக்களுக்கும் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினருக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இலங்கைவாழ் தமிழ்பேசும் மக்கள் சார்பிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பிலும் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் எனது சார்பிலும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.” என்று இரா. சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.