வெளிநாட்டுப் போர்க்கப்பல்களை குறிவைக்கிறது திருகோணமலை துறைமுகம்
வெளிநாட்டுப் போர்க்கப்பல்கள் தரித்து நிற்கும் வகையில் திருகோணமலை துறைமுகத்தில், உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.
கடந்த 28ஆம் நாள் நடந்த காலி கலந்துரையாடல் எனப்படும், கடல் பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய போதே சிறிலங்கா கடற்படைத் தளபதி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
“சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து, 2015 ஜனவரி 8ஆம் நாளுக்குப் பின்னர், 95 வெளிநாட்டுப் போர்க்கப்பல்கள் சிறிலங்கா துறைமுகங்களுக்கு வந்து சென்றுள்ளன.
இவற்றில் ஆறு கப்பல்கள் மாத்திரம், திருகோணமலைத் துறைமுகம் வந்தன. ஏனையவை கொழும்புத் துறைமுகத்திலேயே தரித்து நின்றன.
ஆறு கப்பல்கள் மாத்திரமே திருகோணமலைத் துறைமுகத்துக்கு வந்தமைக்குக் காரணம், அங்கு பொருத்தமான வசதிகள் இல்லாமையே ஆகும்.
அதனால், திருகோணமலைத் துறைமுகத்தில் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வதற்குத் திட்டமிட்டுள்ளோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.