கிளிநொச்சியில் நேற்றிரவு பதற்றம் – வீதியில் ரயர்கள் எரிப்பு
கிளிநொச்சியில் நேற்றிரவு வீதியில் ரயர்கள் எரிக்கப்பட்டு நடத்தப்பட்ட போராட்டத்தினால், பெருமளவு காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்ததுடன், பதற்றமான நிலை காணப்பட்டது.
வடக்கில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், நேற்றுக் காலை முதல், கிளிநொச்சி மருத்துவமனைப் பகுதி தொடக்கம், 155 ஆம் கட்டை வரையான பகுதிகளில் பதற்றமான நிலை காணப்பட்டது.
இந்தப் பகுதியில் ஒன்று கூடிய பொதுமக்களுக்கும் சிறிலங்கா காவல்துறையினருக்கும் இடையே மோதல்களும் இடம்பெற்றன.
நேற்றுமாலை நடந்த மோதல் ஒன்றில் சிறிலங்கா காவல்துறை அதிகாரி ஒருவர் போத்தலால் குத்தப்பட்டு காயப்படுத்தப்பட்டார்.
இதன் பின்னர், முன்னிரவு நேரத்தில் வீதியில் ரயர்களை பொதுமக்கள் சிலர் எரித்த போது மீண்டும் சிறிலங்கா காவல்துறையினருடன் மோதல்கள் ஏற்பட்டன.
இதன் போது பொதுமக்கள் கல்வீச்சுத் தாக்குதலை மேற்கொண்டதாகவும் காவல்துறையினர் தடியடி மேற்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் நேற்றிரவு முழுவதும் கிளிநொச்சி பிரதேசத்தில் பதற்றமான நிலை காணப்பட்டது.
எனினும் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும், சிறப்பு அதிரடிப்படையினர் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.