ஆவா குழு குறித்து விசாரணை- சட்டத்தை கையில் எடுக்க விடமாட்டோம் என்கிறது காவல்துறை
சுன்னாகத்தில் சிறிலங்கா காவல்துறைப் புலனாய்வாளர்கள் இருவர் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டுக்கு உரிமை கோரியுள்ள ஆவா குழு தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட யாழ். பிராந்திய பிரதிக் காவல்துறை மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன,
சுன்னாகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உந்துருளிகளில் வந்த மர்ம நபர்களால் வெட்டப்பட்டு காயமடைந்த சார்ஜன்ட் நவரத்ன மற்றும் கொன்ஸ்டபிள் ஹேரத் ஆகியோர் யாழ். மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பல காவல்துறைக் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு தகவல்களைச் சேகரித்துள்ளன.
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொலை செய்யப்பட்டதற்கு பழிவாங்கும் வகையிலேயே காவல்துறையினர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாக, ஆவா குழு என்ற பெயரில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
எந்தக் குழுக்களையோ எந்தவொரு நபரையோ சட்டத்தைக் கையில் எடுப்பதற்கு அனுமதிக்கமாட்டோம்.
பல்வேறு குழுக்கள் தொடர்பான தகவல்களை திரட்டியுள்ளோம். எவரையும் கைது செய்வதற்கு முன்னதாக, எமக்கு கிடைத்துள்ள தகவல்களை ஆராய்ந்து பார்க்க வேண்டியுள்ளது” என்று தெரிவித்தார்.