சிறிலங்காவுக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை மீள வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனை
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகை சிறிலங்காவுக்கு மீளக் கிடைப்பது, அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் பொருளாதார மற்றும் அரசியல் மறுசீரமைப்பு செயற்பாடுகளிலேயே தங்கியிருப்பதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரசெல்சில் நடத்திய பேச்சுக்களின் பின்னரே சிறிலங்கா பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை அடுத்த ஆண்டு மார்ச் – மே மாதங்களுக்கிடையில் மீளக் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன.
ஆனாலும், கடந்த ஆண்டு அதிபர் தேர்தலுக்குப் பின்னர் முன்னெடுக்கப்படும் அரசியல், பொருளாதார மறுசீரமைப்பும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் தான் அது தங்கியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதன் மூலம், ஜி.எஸ்பி பிளஸ் வரிச்சலுகையை மீள வழங்குதற்கு ஐரோப்பிய ஒன்றியம், அரசியல், பொருளாதார மறுசீரமைப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை சிறிலங்காவுக்கான ஒரு நிபந்தனையாக முன்வைத்துள்ளமை உறுதியாகியுள்ளது.