பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கான கொள்கை, சட்டவரைவுக்கு அமைச்சரவை அனுமதி
சிறிலங்காவில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்துக்குப் பதிலாக, அறிமுகப்படுத்தப்படவுள்ள பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டத்தின் கொள்கை மற்றும் சட்ட வரைவுக்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
அமைச்சரவை இணைப் பேச்சாளரும், பிரதி ஊடகத்துறை அமைச்சருமான கருணாரத்ன பரணவிதான நேற்று இந்த தகவலை வெளியிட்டார்.
இதற்கான அமைச்சரவைப் பத்திரங்களை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார்.
இதற்கமைய, புதிதாக பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டத்தை வரைவதற்கு, சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தலைமையிலான குழுவொன்றை நியமிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
இந்தக் குழுவினால் தயாரிக்கப்படும் சட்ட வரைவு, சிறிலங்கா பிரதமரிடம் கையளிக்கப்பட்டு, நாடாளுமன்ற துறைசார் கண்காணிப்புக் குழுவின் ஒப்புதலுடன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.