தாய்லாந்து சென்றார் சிறிலங்கா அதிபர்
ஆசிய ஒத்துழைப்பு கலந்துரையாடல் மாநாட்டில் பங்கேற்பதற்காக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று தாய்லாந்து சென்றடைந்தார்.
நேற்றுக்காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு பாங்கொக் சுவர்ணபூமி விமான நிலையத்தில் நேற்று முற்பகல் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தாய்லாந்து கலாசார அமைச்சர் விரா ரோஜ்போஜ்சனரத் மற்றும் தாய்லாந்துக்கான சிறிலங்கா தூதுவர் சேனுகா செனிவிரத்ன ஆகியோர் சிறிலங்கா அதிபரை வரவேற்றனர்.
அத்துடன் இராணுவ அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.
ஆசியப் பிராந்தியத்தில் உள்ள 34 நாடுகள் பங்கேற்கும், ஆசிய ஒத்துழைப்பு கலந்துரையாடல் மாநாட்டில் பங்கேற்கவுள்ள சிறிலங்கா அதிபர், தாய்லாந்து பிரதமர் மற்றும் அமைச்சர்களையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.