கொழும்புத் துறைமுகத்தில் மூன்று ஜப்பானிய போர்க்கப்பல்கள்
ஜப்பானியக் கடற்படையின் மூன்று போர்க்கப்பல்கள் நேற்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. ஜப்பானிய கடல் தற்காப்புப் படையின் போர்க்கப்பல்களான, கஷிமா, செடோயுகி, அசாகிரி ஆகியனவே கொழும்புத் துறைமுகம் வந்துள்ளன.
இந்தப் போர்க்கப்பல்களுக்கு சிறிலங்கா கடற்படை பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தது.
நல்லெண்ண மற்றும் பயிற்சி நோக்கங்களுக்காகவே இந்தப் போர்க்கப்பல்கள் கொழும்பு வந்திருப்பதாக சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.
வரும் 12ஆம் நாள் வரை கொழும்பில் தரித்து நிற்கவுள்ள இந்தப் போர்க்கப்பல்கள் சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து போர்ப் பயிற்சிகளிலும் ஈடுபடவுள்ளன.