சீன பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்க கோத்தாவுக்கு நீதிமன்றம் அனுமதி
சீனாவில் நடைபெறவுள்ள பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்பதற்கு, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்துள்ளது.
அவன்ட் கார்ட் நிறுவனத்தின் மூலம் சிறிலங்கா அரசாங்கத்துக்கு 11.4 பில்லியன் ரூபா இழப்பை ஏற்படுத்திய வழங்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்ச உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கில் கோத்தாபய ராஜபக்ச உள்ளிட்ட 8 பேரையும், பிணையில் விடுவித்த நீதிவான், வெளிநாடு செல்லத் தடை விதித்திருந்தார்.
சீனாவில் நடைபெறும் ஏழாவது ஷியாங்சான் அமைப்பின் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்பதற்கு, தம்மீது விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்குமாறு கோரும் மனு நேற்று கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது, எதிர்வரும் 5ஆம் நாள் தொடக்கம் 30ஆம் நாள் வரை வெளிநாடு செல்வதற்கு கோத்தாபய ராஜபக்சவுக்கு நீதிவான் அனுமதி அளித்தார்.
ஏழாவது ஷியாங்சான் அமைப்பின் பாதுகாப்பு மாநாடு வரும் 10ஆம் நாள் தொடக்கம் 12ஆஆம் நாள் வரை சீனத் தலைநகர் பீஜிங்கில் உள்ள ஷியாங்சான் யிஹே விடுதியில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.