மேலும்

ரணில் இன்று இந்தியா பயணம்

ranilசிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று இந்தியாவுக்கான மூன்று நாள் அதிகாரபூர்வ பயணத்தை ஆரம்பிக்கவுள்ளார். நியூசிலாந்து சென்றுள்ள சிறிலங்கா பிரதமர் அங்கிருந்து நேரடியாகப் புதுடெல்லி வரவுள்ளார்.

இன்று புதுடெல்லியை வந்தடையும் சிறிலங்கா பிரதமர், நாளை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

அடுத்த ஆண்டு மே மாதம் சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, சிறிலங்கா பிரதமர் நேரில் அழைப்பு விடுப்பார் என்றும் செய்திகள் கூறுகின்றன.

அத்துடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா  சுவராஜ், இந்திய நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, பெற்றோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஆகியோரையும் சிறிலங்கா பிரதமர் நாளை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியையும் சந்திக்கவுள்ள சிறிலங்கா பிரதமர், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலையும் சந்தித்துப் பேச்சு நடத்துவார்.

நாளை மறுநாள் புதுடெல்லியில் ஆரம்பமாகும் இந்திய பொருளாதார மாநாட்டில் பங்கேற்றுவிட்டு, ரணில் விக்கிரமசிங்க மாலையில் கொழும்பு திரும்புவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *