கோல் ஊன்றிப் பாய்தல் போட்டியில் தேசிய மட்டத்தில் சாதனை படைத்தார் யாழ்.வீராங்கனை அனிதா
சிறிலங்காவின் 42 ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் அனிதா, கோல் ஊன்றிப் பாய்தல் பிரிவில் தேசிய மட்டச் சாதனையை முறியடித்தார்.
யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நேற்றுமுன்தினம் ஆரம்பமாகிய 42 ஆவது தேசிய விளையாட்டுப் போட்டியில், இடம்பெற்ற பெண்களுக்காக கோல் ஊன்றிப்பாய்தல் போட்டியில், ஜெகதீஸ்வரன் அனிதா, 3.41 மீற்றர் தாண்டி தேசிய சாதனையைப் படைத்தார்.
கடந்த மே மாதம் இடம்பெற்ற தேசிய மட்டப் போட்டியில் அனிதா முன்னைய சாதனையை முறியடித்திருந்தார்.
இந்த நிலையில் கடந்த வாரம் நடந்த இராணுவ விளையாட்டுப் போட்டிகளில், ஹசிதா டில்ருக்சி என்ற சிறிலங்கா இராணுவ வீராங்கனை 3.40 மீற்றர் தாண்டி அந்தச் சாதனையை முறியடித்தார்.
இந்த நிலையிலேயே இராணுவ வீராங்கனையின் சாதனையை ஜெகதீஸ்வரன் அனிதா நேற்று 3.41 மீற்றர் தாண்டி தகர்த்தெறிந்தார்.
கோல் ஊன்றிப் பாய்தல் போட்டியில் வடமாகாண வீராங்கனையான சுகிர்தா மூன்றாம் இடத்தைப் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.