மேலும்

கோத்தாவுக்கு சீனா அழைப்பு – நீதிமன்றத்தின் கையில் முடிவு

gotaசிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச சீனாவுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு அனுமதி அளிப்பதா என்பது குறித்து நீதிமன்றம் நாளை முடிவு செய்யவுள்ளது.

சிறிலங்கா அரசுக்குக் கிடைத்திருக்க வேண்டிய சுமார் 11.4 பில்லியன் வருமானத்தை அவன்ட் கார்ட் நிறுவனத்தின் மூலம், இழப்பு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர்  கோத்தாபய ராஜபக்ச உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நேற்றுமுன்தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, கோத்தாபய ராஜபக்ச உள்ளிட்ட 8 பேரையும் பிணையில் செல்வதற்கு அனுமதித்த நீதிவான், இவர்களை வெளிநாடு செல்வதற்குத் தடைவிதித்து, உத்தரவிட்டார்.

எனினும், சீன அரசின் அழைப்பின் பேரில், பாதுகாப்புக் கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்க வரும் 5ஆம் நாள் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு கோத்தாபய ராஜபக்ச திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் அவரது சட்டவாளர் கோரிக்கை விடுத்தார்.

இந்தக் கோரிக்கை குறித்து நாளை ஒக்ரோபர் 3ஆஆம் நாள் முடிவு எடுக்கப்படும் என்று நீதிவான் அறிவித்திருந்தார்.

ஒக்ரோபர் 5ஆம் நாள் தொடக்கம் இரண்டு வாரகாலம் சீனாவில் பயணம் மேற்கொள்வதற்கு கோத்தாபய ராஜபக்ச திட்டமிட்டிருந்தார்.

ஏழாவது ஷியாங்சான் அமைப்பின் பாதுகாப்பு மாநாடு வரும் 10ஆம் நாள் தொடக்கம் 12ஆஆம் நாள் வரை சீனத் தலைநகர் பீஜிங்கில் உள்ள ஷியாங்சான் யிஹே விடுதியில் நடைபெறவுள்ளது.

சுமார் 60 நாடுகள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகளும், 100இற்கு மேற்பட்ட உள்நாட்டு வெளிநாட்டு புலமையாளர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர்.

இந்த மாநாட்டில் பங்கேற்கவே கோத்தாபய ராஜபக்ச சீனா செல்லத் திட்டமிட்டிருந்தார். எனினும், சீனாவுக்கான பயணத்திட்டம் சாத்தியமாகுமா என்பது நாளையே தெரிய வரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *