ஜெனிவாவில் மங்கள சமரவீர – சிறிலங்கா அரசின் நிலைப்பாட்டை விளக்குவார்
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 32 ஆவது கூட்டத்தொடரில், சிறிலங்கா தொடர்பான வாய்மூல அறிக்கையை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் நாளை அதிகாரபூர்வமாக வெளியிடவுள்ள நிலையில், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று ஜெனிவா சென்றடைந்துள்ளார்.
நோர்வே, உக்ரேன் பயணங்களை முடித்துக் கொண்டு ஜெனிவா வந்தடைந்த மங்கள சமரவீர, பேரவைக் கூட்டத்தொடரில் பக்க நிகழ்வாக ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு உப மாநாட்டில் இன்று பங்கேற்று உரையாற்றவுள்ளார்.
அதேவேளை, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் இன்றும் நாளையும், பேரவையின் கூட்டத்தொடர்களில் பங்கேற்கவுள்ளார்.
அவர் இன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த சிறிலங்கா எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாகவும், எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பாகவும், சுருக்கமான விளக்கம் ஒன்றை அளிப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, ஐ.நாவுக்கான சிறிலங்காவின் நிரந்தரப் பணியகத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள உப மாநாடு ஒன்றில், சிறிலங்காவின் தற்போதைய நிலவரங்கள் தொடர்பாக இன்று பிற்பகல் விளக்கமளிக்கப்படவுள்ளது. இதில் மங்கள சமரவீர கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.
நாளை ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை வெளியான பின்னரும், அதற்குப் பதிலளித்து மங்கள சமரவீர உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.