மேலும்

கைது செய்யப்படுவோரை சித்திரவதை செய்யக் கூடாது – சிறிலங்கா அதிபர் கண்டிப்பான உத்தரவு

maithriதீவிரவாதம் தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்படும் அல்லது தடுத்து வைக்கப்படும் எவரையேனும், சித்திரவதை செய்யக்கூடாது என்பது உள்ளிட்ட கண்டிப்பான உத்தரவுகளை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, சிறிலங்கா ஆயுதப்படைகளுக்கும், காவல்துறைக்கும் விடுத்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 32 ஆவது கூட்டத் தொடர் நடந்து வரும் நிலையில், சிறிலங்கா அதிபரின் இந்த புதிய உத்தரவு கடந்த வெள்ளிக்கிழமை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு நபரையும் கைது செய்பவர், தனது பெயர் மற்றும் பதவிநிலை தொடர்பான தகவல்களை அவரது உறவினர் அல்லது நண்பருக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

கைது செய்யப்படும் அல்லது தடுத்து வைக்கப்படும் ஒவ்வொரு நபருக்கும், தாம் எதற்காக கைது செய்யப்பட்டோம் என்ற காரணம் தெரிவிக்கப்பட வேண்டும்.

பெண்களை, வேறு பெண்கள் மூலமே சோதனையிட வேண்டும், அவர்களின் கௌரவம், மற்றும் உடல்ரீதியான இறைமை பாதுகாக்கப்பட வேண்டும்.

கைது செய்யப்படுபவர் மருத்துவ உதவி கோரும் போது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கைது செய்யப்படும் நபரைச் சந்திப்பதற்கு, சட்டவாளருக்கு அனுமதி அளிக்க வேண்டும்.

கைது செய்யப்பட்ட அல்லது தடுத்து வைத்திருக்கும் நபரை சித்திரவதை செய்யவோ அவமரியாதைக்குட்படுத்தவோ கூடாது.

எல்லா தடுப்பு முகாம்களிலும் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். என்பன சிறிலங்கா அதிபரின் உத்தரவில் அடங்கியுள்ளன.

ஆயுதப்படைகளின் பிரதம தளபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில், ஆயுதப்படையினரும், காவல்துறையினரும் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்று குறிப்பிட்டு இந்த ஐந்து பக்க உத்தரவை சிறிலங்கா அதிபர் விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *