ஒடுக்குமுறை அரசுகளின் காவல்துறைக்கு பயிற்சி – ஸ்கொட்லாந்து காவல்துறை மீது குற்றச்சாட்டு
சிறிலங்கா உள்ளிட்ட ஒடுக்குமுறை அரசாங்கங்களுடன் செய்து கொண்ட உடன்படிக்கைகளை பொதுமக்களுக்குத் தெரியாமல், மறைத்து விட்டதாக ஸ்கொட்லாந்து காவல்துறை மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ஸ்கொட்லாந்து காவல்துறையின் பெயர் கெட்டு விடக்கூடாது என்பதற்காகவே, இந்த விவகாரம் மறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
வெளிநாட்டுப் பணிகளின் மூலம், ஸ்கொட்லாந்து காவல்துறை கடந்த மூன்று ஆண்டுகளில், 1.8 மில்லியன் பவுண்ட் நிதியை பெற்றுள்ளது.
ஆனால், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட நாடுகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், இந்த உடன்பாடுகள் அமைந்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
2013ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து, இருதரப்பு பயிற்சிகள் மூலம், சிறிலங்காவிடம் இருந்து, 713,646 பவுண்டும், தென்சூடானில் இருந்து 229,157 பவுண்டும், ஐக்கிய அரபு எமிரேட்சிடம் இருந்து, 119,812 பவுண்டும், பெற்றுக் கொள்ளப்பட்டதாக, ஸ்கொட்லாந்து காவல்துறை தலைவர் பிலிப் கோம்லி தெரிவித்துள்ளார்.
இவற்றில் பெரும்பாலான பயிற்சிக்கான கொடுப்பனவு பிரித்தானிய மற்றும் ஸ்கொட்லாந்து அரசுகளினால் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.