அடுத்தவாரம் கொழும்பு வருகிறார் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்
சிறிலங்கா அரசாங்கம் அமைக்கவுள்ள நல்லிணக்கப் பொறிமுறை தொடர்பாக ஆராய்வதற்கு, உண்மை, நீதி, மற்றும் மீண்டும் பிரச்சினைகள் ஏற்படாதிருப்பதை உறுதிப்படுத்துவது தொடர்பான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரிப் அடுத்த வாரம் கொழும்பு வரவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 32ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 13ஆம் நாள்,ஆரம்பமாகவுள்ளது. இந்த அமர்வில் சிறிலங்கா தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் முன்னேற்றம் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் எதிர்வரும் 29ஆம் நாள் வாய்மூல அறிக்கையைச் சமர்ப்பிக்கவுள்ளார்.
அதற்கு முன்னதாக, ஐ.நா சிறப்பு அறிக்கையாளரின் இந்தப் பயணம் இடம்பெறவுள்ளது. எனினும் இவரது பயணம் தொடர்பாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு இதுவரை தகவல் எதையும் வெளியிடவில்லை.
அதேவேளை, கொழும்பு வரும், ஐ.நா சிறப்பு அறிக்கையாளர், அரச அரசின் உயர்மட்டத்தினருடனும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனும் பேச்சுக்களை நடத்துவார் என்று தெரியவருகிறது.
இவர் வடக்கிற்கும் பயணம் மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், நல்லிணக்கம் தொடர்பான செயலணியுடனும் இவர் கலந்துரையாடவுள்ளார்.