சம்பூர் விவகாரம் – சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் மீதும் நடவடிக்கை?
சம்பூர் விவகாரத்தைக் கையாண்டது தொடர்பாக சிறிலங்கா பாதுகாப்புச் செயலருக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கக்கூடும் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்வுகளை முப்படையினரும் புறக்கணிப்பதென்றும், அவரை முப்படையினரின் முகாம்களுக்குள் அனுமதிப்பதில்லை என்றும், சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு எடுத்த முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
முப்படைகளின் தளபதிகள், பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சியுடன் கலந்துரையாடி இந்த முடிவை எடுத்திருந்தனர்.
ஆனால், இது அரசியலில் முப்படையினரின் நேரடித் தலையீடு என்று கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், இன்று முப்படைகளின் தளபதிகளும் அவசர ஆலோசனை ஒன்றை நடத்தினார்.
இதையடுத்தே, கிழக்கு முதல்வருக்கு எதிராக எடுக்கப்பட்ட முடிவுகளை கைவிடுவதென முப்படைகளினதும் தளபதிகள் தீர்மானித்தனர்.
இந்த முடிவு, இராணுவ, கடற்படைப் பேச்சாளர்கள் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
அதேவேளை, கிழக்கு முதல்வரின் செயலக்கு எதிர்வினையாக, படைத்தரப்பு எடுத்த முடிவை ஊடகங்களுக்குப் பகிரங்கப்படுத்திய, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சுக்கு எதிராக, அரசாங்கம் நடவடிக்கை எடுக்கக் கூடும் என்று உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.