பங்களாதேஸ் பிரதமருடன் சிறிலங்கா அதிபர் சந்திப்பு – டிசெம்பரில் டாக்கா செல்கிறார்
பங்களாதேஸ் தலைநகர் டாக்காவுக்கும், கொழும்புக்கும் இடையில் நேரடி விமான சேவையை ஆரம்பிக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பங்களாதேஸ் பிரதமர் ஷேக் ஹசீனாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜி-7 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பான் சென்றிருந்த இரண்டு நாடுகளின் தலைவர்களும், நேற்று ஜப்பானின் நகோயா நகரில் உள்ள ஹில்டன் விடுதியில் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.
இந்தப் பேச்சுக்களின் போது, கொழும்பு-டாக்கா இடையே நேரடி விமான சேவையை ஆரம்பிக்குமாறு சிறிலங்கா அதிபர் விடுத்த கோரிக்கையை கவனத்தில் எடுத்து ஆராய்வதாக பங்களாதேஸ் பிரதமர் உறுதியளித்துள்ளார்.
சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமைகள் குறித்தும் இவர்கள் பேச்சு நடத்தினர்.
மருந்துப் பொருட்கள் மற்றும் சணல் பொருட்களை பங்களாதேசில் இருந்து இறக்குமமதி செய்யுமாறு சிறிலங்கா அதிபரிடம் பங்களாதேஸ் பிரதமர் கோரிக்கை விடுத்தார்.
இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வதெனவும் இருநாடுகளின் தலைவர்களும் இந்தச் சந்திப்பின் போது இணங்கியுள்ளனர்.
அதேவேளை, வரும் டிசெம்பர் மாதம் பங்களாதேசுக்கான பயணத்தை மேற்கொள்வதில் சிறிலங்கா அதிபர் ஆர்வத்தை வெளிப்படுத்தியதாக, அந்தநாட்டின் வெளிவிவகாரச் செயலர் சஹிதுல் ஹக் தெரிவித்துள்ளார்.